Published : 03 Dec 2014 11:45 AM
Last Updated : 03 Dec 2014 11:45 AM
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கேழ்மலை பகுதியைச் சேர்ந்தவர் ரகு. லாரி ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து மின்சாதன உதிரிபாகங்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பதவாடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே காரில் வந்த 4 பேர் லாரியை வழி மறித்து, தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறி ஆவணங்களுடன் கீழே இறங்க ஓட்டுநரை வற்புறுத்தியுள்ளனர்.
கீழே இறங்கிய ரகுவை, தாக்கி மரத்தில் கட்டி வைத்துவிட்டு லாரியைக் கடத்திச் சென்றனர். இதில் காயம் அடைந்த ரகு, நீண்ட நேரத்துக்குப் பிறகு கயிறுகளை அறுத்து தப்பினார். இதுகுறித்து பர்கூர் காவல் நிலையத்தில் நேற்று அவர் புகார் அளித்தார்.
இதுகுறித்து எஸ்பி கண்ணம்மாள் கூறியதாவது: இந்த சம்பவத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த லாரியை மர்ம நபர்கள் கடத்திச்சென்றுள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்ய பர்கூர் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லும்போது பாதுகாப்புடன் எடுத்துச்செல்ல லாரிகளில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்த வேண்டும், லாரி ஓட்டுநர்கள் டோல்கேட்டில் மட்டும் வண்டியை நிறுத்த வேண்டும் என்றும், இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 3 மாதங்களாக லாரிகளை மர்ம கும்பல் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஓட்டுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT