Published : 11 Feb 2014 04:04 PM
Last Updated : 11 Feb 2014 04:04 PM

தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் விரைவில் பிரதமரை சந்திப்பார்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேட்டி

தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் விரைவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 2 நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் ஏராளமானோர் மனுக்களை வழங்கினர். செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியுடன் மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.

இரண்டு நாட்களில் 1200 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது ஆதரவாளர் சைதை ரவி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மனு செய்தனர்.

இதே போல் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலுவுக்காக சேலம், கிருஷ்ணகிரி, தென்சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு அவரது ஆதரவாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான தாமோதரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதுதவிர சிதம்பரம், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் 39 தொகுதி களில் போட்டியிட விரும்பி தனித் தனியே மனுக்களை வழங்கினர். செவ்வாய்கிழமை கடைசி நாள் என்பதால், சத்திய மூர்த்தி பவனில் கூட்டம் அலை மோதியது.

இதற்கிடையே, சத்திய மூர்த்தி பவனில் நிருபர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சி புதிய எழுச்சி பெற்றுள்ளது. காங்கிரஸார் நாடு முழுவதும் உற்சாகமாக உள்ளனர். நாங்கள் கூட்டணி பற்றி யோசிக்கவில்லை. எனவே, 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெறுகிறோம். இந்த மனுக்கள், 12-ம் தேதி (நாளை) மேலிடம் நியமித்த தேர்தல் குழுவால் பரிசீலிக்கப்படும். தேர்வு செய்யப்படும் மனுக்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

கூட்டணி தொடர்பாக பல் வேறு கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது. தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளார். விரைவில் தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் பிரதமரைச் சந்திக்க உள்ளனர்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பொதுக் கூட்டங்களில் பேசும்போது தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். சென்னை வண்டலூரில் நடந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்று விமர்சித்துள்ளார். அவர் உண்மைகளை மறைத்து பேசுகிறார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் இதுபோன்று நாகரிகமற்ற முறையில் பேசக் கூடாது.இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x