Last Updated : 04 Jul, 2019 12:46 PM

 

Published : 04 Jul 2019 12:46 PM
Last Updated : 04 Jul 2019 12:46 PM

கிரண்பேடி மீது தேச விரோத வழக்குப் பதிவு: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் ஆளுநர் கிரண்பேடி மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரத்தால் சென்னையில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் சுயநல எண்ணமும் கோழைத்தனமான அணுகுமுறையும் வறட்சிக்கு காரணமாக உள்ளது என தனது வாட்ஸ் அப்பில் குறிப்பிட்டிருந்தார்.

கிரண்பேடியின் இந்த விமர்சனத்துக்கு அதிமுக, திமுக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த 2-ம் தேதி திமுக சார்பில் ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் தமிழக மக்களை விமர்சித்துப் பேசிய ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று அதிமுக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆளுநர் மாளிகை அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் பாஸ்கர், அசானா, வையாபுரி, மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதில் அன்பழகன் எம்எல்ஏ பேசும்போது, "தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் ஆளுநர் கிரண்பேடி மீது தேசவிரோத வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசு அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் கிரண்பேடியைப் பார்த்து புதுச்சேரி முதல்வர் அச்சப்படுவார்.

ஆனால், தமிழக முதல்வர் குறித்துப் பேச ஆளுநர் கிரண்பேடிக்கு என்ன தகுதியுள்ளது? தமிழக மக்கள் குறித்து கிரண்பேடி பேசியதை திரும்பப் பெற்று, அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். தார்மீகப் பொறுப்பேற்று தாமாகவே தனது பதவியை விட்டு விலக வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது ஆளுநர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும், புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கிருந்து பெரியக்கடை போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x