Published : 06 Jul 2019 07:34 AM
Last Updated : 06 Jul 2019 07:34 AM
அத்திவரதர் விழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிவதால், கூட்டம் அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் எழுந்தருளியுள்ளார். இவரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். 5-வது நாளான நேற்று காவிப் பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
பொதுவாக கோயிலின் கிழக்கு கோபுரத்தில் இருந்துதான் பொதுமக்கள் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்வார்கள். நேற்று கூட்டம் அதிகமானதால் கிழக்கு கோபுரத்தை தாண்டி செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் கோயில் மதில் சுவரையொட்டி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்றனர். அதேபோல் கிழக்கு கோபுரத்தில் இருந்து நேராக ஒரு வரிசை சென்றது. இரண்டு வரிசையும் கிழக்கு கோபுரத்தின் வழியாக அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரசித்தனர்.
காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார். அவர் கூட்டம் நீண்ட நேரம் தேங்காதவாறு பார்த்துக் கொண்டார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பட்டாபிராமன் தன் வாழ்நாளில் 3-வது முறையாக அத்திவரதரை நேற்று தரிசனம் செய்தார். அவர் முதலில் 7 வயதிலும், அடுத்து 47 வயதிலும் தரிசனம் செய்துள்ளார்.
மீண்டும் இரவு 8 மணிவரை அனுமதி
கோடை விழா, ஆனி கருடசேவை ஆகிய விழாக்கள் காரணமாக காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால் கடந்த2 நாட்களாக பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனி கருட சேவை நடைபெறும் ஜூலை 11, ஆடி கருட சேவை நடைபெறும் ஆகஸ்டு 15 ஆகிய 2 நாட்கள் மட்டும் காலை 5 மணி முதல் மாலை 5 மணிவரை தரிசனம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT