Last Updated : 12 Jul, 2019 08:32 PM

 

Published : 12 Jul 2019 08:32 PM
Last Updated : 12 Jul 2019 08:32 PM

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தொடர் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட  நபர் கைது; 19 லேப்டாப்கள் பறிமுதல்

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தொடர் லேப்டாப் திருட்டில் ஈடுபட்டு வந்த திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 19 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழகம், பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்லும் ஐடி ஊழியர்கள், தொழிலதிபர்களின் லேப்டாப் அடிக்கடி திருட்டுப் போனது. இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீஸார் பேருந்து நிலையத்தில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து உருளையன்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை மப்டி உடையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரைப் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்ட நிலையில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.  அப்போது 3 லேப்டாப்களை அவர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் திருச்சி ராம்ஜி நகர் புங்கனூரைச் சேர்ந்த செந்தில்குமார்(38) என்பதும், தவளக்குப்பத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலரிடம் லேப்டாப்களைத் திருடியதும் தெரியவந்தது.  தொடர் விசாரணையில் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த செல்வகுமார், முத்துகுமார் என்பவர்களுடன் சேர்ந்து மேலும் 16 லேப்டாப்களைத் திருடி திருச்சியில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இன்று செந்தில்குமாரை கைது செய்த போலீஸார், அவருடன் திருச்சி விரைந்த அங்கு பதுக்கி வைத்திருந்த மேலும் 16 லேப்டாப்களை  பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்களின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

பின்னர் கைது செய்யப்பட்ட செந்தில்குமாரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரைத் தேடி வருகின்றனர். சிறப்பாகச் செயல்பட்டு லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட நபரைப் பிடித்த போலீஸாரை கிழக்குப் பகுதி எஸ்பி மாறன் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x