Last Updated : 02 Jul, 2019 12:43 PM

 

Published : 02 Jul 2019 12:43 PM
Last Updated : 02 Jul 2019 12:43 PM

24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் தொடர் போராட்டம்; ஆளுநர் கிரண்பேடிக்கு திமுக எச்சரிக்கை

24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த மூன்று தினங்களுக்கு முன் தனது வாட்ஸ் அப்பில் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரத்தால் சென்னையில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் சுயநல எண்ணமும் கோழைத்தனமான அணுகுமுறையும் கூட வறட்சிக்கு காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே தமிழக மக்கள் குறித்து விமர்சித்த ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆளுநர் மாளிகை சுற்றியுள்ள பாதைகள், சாலைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொறுப்பாளர் சபாபதி மோகன் தலைமையில், புதுச்சேரி திமுக எம்எல்ஏ சிவா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ மக்களை விமர்சித்த ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து புதுச்சேரி பொறுப்பாளர் சபாபதி மோகன் பேசும்போது, "ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி திமுக 24 மணிநேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதிக்கிறது.

இல்லையென்றால் தொடர் போராட்டம் நடைபெறும். மக்களவை தேர்தலில் பல கோட்டைகள் இடிந்திருக்கின்றன. கிரண்பேடி கோட்டைக்கு சொந்தக்காரர் கிடையாது. அவர் மோடியால் இறக்கி விடப்பட்டவர். இருக்கும் பதவிக்கு கண்ணியமாக இருங்கள்," என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x