Published : 10 Jul 2019 04:33 PM
Last Updated : 10 Jul 2019 04:33 PM

பொழுதுபோக்கு பூங்காவுக்கு எதிரான வழக்கு;  கீழமை நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் விபத்தில்சிறுமி உயிரிழந்த வழக்கில் போலீஸார் ஒருதலைப்பட்சமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக பாதிக்கப்பட்டவர் தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் உரிய விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பிரபல பொழுது போக்கு பூங்காவில் ராட்சத ராட்டின விபத்து நடந்தது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கலைச்செல்வி மற்றும் அவருடைய 12 வயது மகள் பாவன பிரியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில், சிறுமி பாவன பிரியா பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, சிறுமியின் தந்தை பாபு அளித்த புகாரின்பேரில் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். வழக்கை விசாரித்த காவல்துறை விபத்தில், சிறுமிக்கு காயம் மட்டுமே ஏற்பட்டதாக கூறி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

காவல்துறையின் விசாரணை ஒருதலைப்பட்சமானது என்றும், பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்களின் அலட்சியத்தின் காரணமாகவே விபத்து நிகழ்ந்து மரணம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும் எனக்கோரி, சிறுமியின் தந்தை பாபு, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆலந்தூர் நீதிமன்ற நடுவர் உரிய விசாரணை நடத்தி, உத்தரவுகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x