Published : 06 Jul 2019 08:00 AM
Last Updated : 06 Jul 2019 08:00 AM
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் ஜூலை 20-ம் தேதி முடிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பேரவைத்தலைவர் பி.தனபால் பேரவையில் வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் தற்போது துறைகள்தோறும் மானியக் கோரிக்கைக்கான விவாதங்கள் நடந்து வருகின்றன. முன்னதாக, ஜூன் மாதம் கூடிய அலுவல் ஆய்வுக் குழுவில் ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை பேரவைக் கூட்டத்தை 23 அலுவல் நாட்களில் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூன் 28-ம் தேதி பேரவை கூடியது. ஜூலை 1-ம் தேதி முதல் துறைகள்தோறும் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இதையடுத்து தேர்தல் பணிகளுக்காக, சட்டப்பேரவைக் கூட்டத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அலுவல் ஆய்வுக்கூட்டம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் கூடியது. இதில், பேரவைக் கூட்டத்தை வரும் 20-ம் தேதி சனிக்கிழமையுடன் 11 அலுவல் நாட்களில் முடித்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டப் பேரவையில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை பேரவைத்தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
மேலும், அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூலை 9, 10. 12, 15, 16, 17, 18, 20 ஆகிய 8 தினங்களில் காலை மற்றும் மாலையில் பேரவைக்கூட்டம் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் பேரவை கூடும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT