Published : 09 Jul 2019 11:55 AM
Last Updated : 09 Jul 2019 11:55 AM
முன்னேறிய உயர் வகுப்பினருக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சமூக நீதியை அழிக்கும் தொடக்கப்புள்ளி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2006-ல் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் வைகோ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜரானார்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சி என பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து அவர் மீது தமிழக அரசு சார்ப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது .
அந்த வழக்கின் விசாரணை ஜூலை 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தமிழகம்தான் சமூக நீதியின் தொட்டில், பாதுகாப்பு அரண். இந்நிலையில், தமிழகத்தில் முன்னேறிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை அழிக்கும் தொடக்கப்புள்ளி. இதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்க கூடாது.
அதேபோல் மதச்சார்பின்மைதான் இந்தியாவின் அடித்தளம். அதற்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்கள் புனித நீரை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டுவரக் கூடாது என விமானத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை விமானத்துறை அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT