Last Updated : 06 Jul, 2019 03:12 PM

 

Published : 06 Jul 2019 03:12 PM
Last Updated : 06 Jul 2019 03:12 PM

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 40 பவுன் நகை திருட்டு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் 40 பவுன் நகையை மர்ம நபர் திருடிக்கொண்டு சென்றுள்ளார்.

பாளையங்கோட்டை மகாராஜ நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (61). அரசு போக்குவரத்துக் கழகத்தில் துணை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சென்னை கே.கே.நகரில் உள்ள மகள் வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

இவரது உறவினர் திருமண விழா பாளையங்கோட்டை மகாராஜ நகரில் வருகிற திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தனது மனைவியுடன் நேற்று இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். 40 பவுன் நகையை துணிப்பையில் வைத்து, அதை ஒரு பேக்கில் வைத்துள்ளார். அந்த பேக்கை ரயிலில் இருக்கைக்கு அடியில் வைத்துள்ளார்.

இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த அவர்கள், இன்று காலையில் ரயிலில் இருந்து இறங்கி, வீட்டுக்கு சென்றதும் பேக்கை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பேக்கில் வைத்திருந்த நகையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சோமசுந்தரம், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்பதிவு செய்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம்  நகையை திருடிக்கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த தம்பதியிடம் நகைகளை திருடிய மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

ரயிலில் பயணம் செய்வோர் பையில் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்துவிட்டு தூங்கிவிடுவதால் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x