Published : 05 Jul 2019 09:33 AM
Last Updated : 05 Jul 2019 09:33 AM
வளர்ச்சி என்றபெயரில் இயற்கையை அழிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக மனிதர்கள் ஈடுபட்டு வருவதன் விளைவே தற்போதைய தண்ணீர்ப் பற்றாக்குறை.
மீள் உருவாக்கம் செய்யமுடியாத கனிம வளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. நீராதாரங்களைப் பாதுகாத்து, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, சேமிக்காவிட்டால் ஒரு சொட்டு நிலத்தடி நீர்கூட இல்லாத நிலை உருவாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் சூழலியலாளர்கள்.
கான்கிரீட் காடுகளாக மாறி வரும் வனப் பகுதிகளும், மழை நீரை உறிஞ்சமுடியாத நகர்ப் பகுதிகளும் பேராபத்தை ஏற்படுத்தும். தற்போதே பல பகுதிகளில் 1,000 அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டது. குளம், குட்டை, வாய்க்கால், அணை, ஆறு என அனைத்து நீராதாரங்களையும் தூர் வாரி, சீரமைத்து, நீர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மழை நீரை சேகரிக்கும் வகையில், பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர் கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள். பேராசிரியை காந்திமதி தலைமையில், பொறியியல் பிரிவு மாணவர்கள் 15 பேர் மற்றும் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் கோ.லீலா உள்ளிட்டோர், நிலத்தடி நீர் செறிவூட்டலில் ஒரு பகுதியான மழைநீர் அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைத்து வருகின்றனர். இந்த வளாகத்தில் பெய்யும் மழைநீர் இந்தக் கால்வாய் மூலம் சென்று, அங்குள்ள கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் மழைநீர், பிஏபி திட்ட அலுவலக வளாகத்தில் குடிநீரைத் தவிர, பிற தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தக் குழுவினர் பொள்ளாச்சியில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மழைநீர் அறுவடை அமைப்பை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.'
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT