Published : 03 Jul 2019 07:55 PM
Last Updated : 03 Jul 2019 07:55 PM

மடிப்பாக்கம் பாதாள சாக்கடை திட்டம்: 3 ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மடிப்பாக்கம் பகுதியில் 2016-ல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து, முழு விவரங்களை வரும் 5-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதிக்கு 8 ஆண்டுகள் கடந்த பின்னும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அப்பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

அந்த அறிக்கையில், “160 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பான திட்டம் அறிக்கையை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட அறிக்கையை பெற்ற பிறகு 6 மாதங்களில் டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 2016-ல் பணிகள் தொடங்கிய போதும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து வரும் 5-ம் தேதிக்குள் மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான முழு விவரங்களை தாக்கல் செய்ய குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x