Published : 04 Jul 2019 01:41 PM
Last Updated : 04 Jul 2019 01:41 PM

ஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் மக்களவை இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட்டார். வேலூர் தொகுதியில் மட்டும் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

ரத்து பின்னணி

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்த சூழ்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

நேரடியாக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் மற்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். இதனால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் அதிகாரியின் அறிக்கை, வருமான வரித்துறை அறிக்கை, போலீஸார் வழக்குப் பதிவு உள்ளிட்ட அம்சங்களை வைத்து கடந்த ஏப்.16 அன்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையின் முடிவில் தேர்தலை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  இந்தியாவிலேயே வேலூரில் மட்டுமே தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும்வென்றது.

இந்நிலையில் காலியாக உள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலர் சுமித் முகர்ஜி  வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆகஸ்ட் 5 மக்களவைத் தேர்தல்

தேர்தல் அறிவிப்பு நடைமுறை ஜூலை 11 (வியாழன்)

வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18 ( வியாழன்)

வேட்புமனு பரிசீலனை ஜூலை 18 (வெள்ளி)

வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 22 (திங்கள்)

வாக்குப்பதிவு நாள் ஆகஸ்ட் – 5 (திங்கள்)

வாக்கு எண்ணிக்கை நாள் ஆகஸ்ட் 9 (வெள்ளி)

தேர்தல் நடைமுறை முடிவு  ஆகஸ்ட் - 11 (ஞாயிறு)

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்றுமுதல் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x