Published : 02 Jul 2019 12:00 AM
Last Updated : 02 Jul 2019 12:00 AM

கடலிலும் பிளாஸ்டிக் கழிவு.. வலைவிரித்து அகற்றும் மீனவர்: இரண்டே மாதங்களில் 13.5 டன் கழிவை அகற்றினார்

தனது வாழ்வாதாரத்துக்காக மட்டுமே மீன்பிடி தொழில் செய்யாமல், கடலின் தூய்மையை கெடுக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்காகவும் மீன்பிடி தொழில் செய்கிறார் கேரள இளைஞர் பிரியேஸ்(30). இவர் இரண்டே மாதத்தில் 13.5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை ஆழ்கடலில் இருந்து அகற்றி பிரமிக்க வைத்துள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரையின் அருகில் உள்ளது அழியூர் கிராமம்.

அரபிக்கடலை ஒட்டிய இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான் மீனவர் பிரியேஸ். சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பிரியேஸ், தன் குடும்ப வறுமையின் காரணமாக 8-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். தொடர்ந்து கடல்தொழிலுக்கு சென்றுவிட்ட பிரியேஸ், சூழல் காப்பாளனாக மாறியது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:எனக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களை நன்றாக படிக்க வைப்பதே எனது லட்சியம். அதேநேரத்தில் நானும் இப்போது தனித்தேர்வராக 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். என்னோட ஆசிரியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

என்னோடு படிப்பவர்கள் எல்லாம் தன்வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்துவது குறித்து எழுதினார்கள். ஆனால் எனக்கு கடல்தான் வீடு. நான் என் வாழ்வின் பெரும்பகுதி நேரத்தை அங்குதான் செலவு செய்திருக்கிறேன். அந்தக் கடல் பிளாஸ்டிக்கினால் பாதிக்கப்படுவது குறித்துஅந்தக் கட்டுரையில் எழுதியிருந்தேன். சுற்றுலா வந்தவர்கள் கரையில் போடும் பிளாஸ்டிக் பொருட்கள், தெரியாதவர்கள் கடலில் வந்து வீசிச்செல்லும் பொருட்கள், மீனவர்களின் குடிநீர் பாட்டில்கள் என கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் நாம் கரையில்தான் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கும் எனபொதுவாக நினைத்துக் கொள்கிறோம். ஆழ்கடலில் அதிகமாக இருப்பது கடலோடிகளுக்குத்தான் தெரியும்.

நான் 15 ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் செய்கிறேன். ஆரம்பகாலங்களில் நான் மீன்பிடிக்க சென்றபோது பார்த்ததைவிட இப்போது பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ளன. இதையெல்லாம் அந்த கட்டுரையில் எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து யோசித்துப் பார்த்தேன். நமக்கான வாழ்வாதாரத்தைத் தரும் கடலன்னைக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டுமே எனத்தோன்றியது. உடனே ஆழ்கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி இயற்கை வளத்தைக் காக்க சிறுகருவியாய் இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

நான் கடலுக்குள் மீன்பிடிக்கும் நேரத்தைக் கூட்டினேன். சிலநேரங்களில் வழக்கமாக நான்மீன்பிடிக்கச்செல்லும் நேரத்தைவிட, கூடுதலாக 3 மணி நேரங்கள் கடலுக்குள் சுற்றிவந்துபிளாஸ்டிக்கை சேகரிப்பேன். பிளாஸ்டிக்கை சேகரிக்க தனிவலையைப் பயன்படுத்துகிறேன். முன்பெல்லாம் மீன் வலையிலேயே அதிக அளவு பிளாஸ்டிக் கிடைத்தது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 13.5 டன் பிளாஸ்டிக் கழிவை கடலில் இருந்து எடுத்து உள்ளேன். அதில் பிளாஸ்டிக் பாட்டில்களே அதிகமாக இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

சேவை செம்மல் பிரியேஸ்..

இபோன்ற சேவைகளில் பிரயேஸ் ஈடுபடுவது முதல்முறை அல்ல. இப்போதுகூட மீன்பிடித் தடைக்காலம் என்பதால் (அரபிக்கடலில்), இவரது ஃபைபர் படகை ஆபத்தில் சிக்கும் மீனவர்களை மீட்கும் ஆபரேசனுக்கு மீன்வளத்துறைக்கு வழங்கி இருக்கிறார். குமரி, கேரளத்தை ஒக்கி புயல் தாக்கியபோது இறந்துபோன மீனவர்களின் உடல்களை கடலோர காவல்படையுடன் சேர்ந்து கடலில் இருந்து எடுத்து அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு கேரளத்தில் பெருமழையால் வெள்ளம் சூழ்ந்தபோதும் மீட்புப் பணியில் ஈடுபட்டார் பிரியேஸ். இதைப் பாராட்டி சான்றிதழும், ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கியது கேரள அரசு. ஆனால் அந்தப் பணத்தையும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டார் பிரியேஸ்.

வியக்கவைக்கும் பஞ்சாயத்து

பிரியேஸின் சொந்த ஊரான அழியூர் பஞ்சாயத்து பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தையும் செயல்படுத்தி வருகிறது. இந்த பஞ்சாயத்தின் சார்பில் கடந்த ஆண்டு மட்டும் 40 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. பிரியேஸ் கடலில் இருந்து எடுத்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளும் இங்குதான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x