Published : 03 Jul 2019 01:49 PM
Last Updated : 03 Jul 2019 01:49 PM
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு எந்தக் காலத்திலும் அனுமதி வழங்காது என அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் இன்று (புதன்கிழமை) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக அவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, "மத்திய அரசு, ஒற்றை உரிமம் மூலம் இயற்கை எரிவாயு உட்பட அனைத்துவகை எரிபொருளையும் உற்பத்தி செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், "ஹைட்ரோகார்பன் திட்டம் மட்டுமல்ல இயற்கைக்கு எதிரான எந்த திட்டத்தையும் எக்காலத்திலும் தமிழக அரசு அனுமதிக்காது. மத்திய அரசே அனுமதி அளித்தாலும்கூட அதற்கு மாநில அரசின் ஒப்புதலும் அவசியம். அந்தவகையில் மாநில அரசு அத்திட்டத்திற்கு ஒருபோதும் இசைவு தெரிவிக்காது.
ஹைட்ரோகார்பன் எடுக்க ஆய்வு செய்ய அனுமதித்ததே திமுகதான். அதிமுக ஆட்சி அமைந்தபின்னர்தான் அதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், இன்று திமுகவினர் செயல்படாத ஒரு திட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி போராட்டத்தை நடத்தவைக்கின்றனர் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, "திமுக ஆட்சியில் ஆய்வு செய்வதற்கான அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை" என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போதும், "ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு திமுக ஆட்சி காலத்தில் ஆய்வுக்கு மட்டும்தான் ஒப்பந்தம் போடப்பட்டது. எரிவாயு எடுக்க ஒப்பந்தம் போடவில்லை" என்று விளக்கினார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக அவையில் இவ்வாறாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT