Published : 09 Jul 2019 11:53 AM
Last Updated : 09 Jul 2019 11:53 AM

ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா?- சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜீவஜோதியின் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால், சரண் அடைவதற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு, மனுத்தாக்கல் செய்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அவர் உடனடியாக சரணடையவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சரவணபவன் நிறுவனர் ராஜகோபால், தனது ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக அடைய நினைத்து, ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார். இந்த வழக்கில் சிக்கிய ராஜகோபாலுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2004-ல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது கூட்டாளிகள் 11 பேருக்கு 7 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2009-ம் ஆண்டு, ‘‘குற்றவாளிகளுக்கு கொலைக் குற்றத்தை கருத்தில் கொண்டு தண்டனை வழங்காமல், கீழமை நீதிமன்றம் தவறு இழைத்துவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றம் இழைத்துள்ளனர். இது மன்னிக்க முடியாத குற்றம்’’ எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட ராஜ கோபால் உட்பட அவரது கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டு கள் கழித்து இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பின்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால் உட்பட அவரது கூட்டாளிகள் ஜுலை 7-ம் தேதிக்குள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறைக்குச் செல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கெடு விதித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ராஜகோபால் சரண் அடைந்து இருக்க வேண்டும். ஆனால், அவர் சரண் அடையவில்லை.

ஆனால், அவரது கூட்டாளிகள் டேனியல், தமிழ்செல்வன், சேது, காசிவிஸ்வநாதன், கார்மேகம், ஜாகீர் உசேன், பாலு, பட்டு ராஜன், முருகானந்தம் ஆகியோர் சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) சரணடைந்தனர். சரணடைந்த 9 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி தானேந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராஜகோபால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ராஜகோபால் சிறைக்குச் செல்ல முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிப்படைந்துள்ளார். அவரால் தனியாக எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். எனவே அவரது தண்டனையை மருத்துவமனையிலேயே கழிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

அந்த மனு நேற்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆனால், ராஜகோபால் தரப்பில் அவரது வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகாததால் வழக்கை தள்ளிவைக்கக் கோரப்பட்டது. அதனையேற்று வழக்கு 9-ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், காட்டமாகப் பேசினர். ''உடல்நிலையைக் காரணம் காட்டி, சரணைடைய முடியாது என்கிறீர்கள். இதைக் கடைசி நேரத்தில் வந்து சொல்வது ஏன்? அதற்கான அவசியம் என்ன?

ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? சரணடைய முடியாது என்று தெரிவிக்க, கடைசி நேரத்தைத்தான் பயன்படுத்துவீர்களா?'' என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

ராஜகோபால் தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், ''உடல்நிலை காரணமாக மருத்துவ வசதிகள் தேவைப்பட்டால், சிறை நிர்வாகமே அதைச்செய்து கொடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

உடல்நிலை எப்படி இருந்தாலும் ராஜகோபால் உடனடியாக சரணடைந்து சிறைக்குச் செல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x