Published : 26 Aug 2017 08:02 PM
Last Updated : 26 Aug 2017 08:02 PM
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் பேத்திக்கு முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக ரூ.2.20 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் கலாவாணி(70) மருத்துவர். இவரின் பேத்தியும் மருத்துவர். கடந்த 2013 ம் ஆண்டு இவர் பேத்தியின் முதுகலை பட்டப்படிப்பிற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது டெல்லி ஹரிநகர் ஆஷ்ரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம்(53) , சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன், லாவண்யா ஆகிய மூன்று பேர் அறிமுகமாகியுள்ளனர்.
மருத்துவப் படிப்பிற்காக இவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வங்கி மூலம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரத்தை கலாவாணி அளித்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றவர்கள் சொன்னபடி மருத்து இடம் வாங்கித் தராமல் தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து தன்னிடம் மூவரும் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கலாவாணி கடந்த ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். புகார் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில் கடந்த ஆண்டு வெங்கட்ராமனும், லாவண்யாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த இப்ராஹிமை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 24 ம் தேதி கைது செய்த போலீஸார் சென்னை அழைத்து வந்தனர்.
இன்று சென்னை அல்லிக்குளம் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஷபீர் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி இப்ராஹிமை சிறையில் அடைத்தனர்.
மருத்துவத்தேர்வு, நீட் போன்ற வெளிப்படையான முறைகளில் மருத்துவப் படிப்புகள் தேர்வு நடக்கும்போது இது போன்ற போலி ஆசாமிகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீஸார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT