Published : 07 Aug 2017 08:43 PM
Last Updated : 07 Aug 2017 08:43 PM

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு: முதல்வரிடம் பாஜக கோரிக்கை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் கே.பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், அரசு பள்ளி கல்வித்தரம் உயர்த்த வேண்டும், உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை வலியுறுத்தி பாஜக இளைஞரணி சார்பில் சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, தலைமை செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக இளைஞரணி சார்பில் கோரிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டுமென்பதே முதன்மை கோரிக்கையாகும். உடனடியாக மதுவிலக்கு கொண்டுவர முடியாவிட்டாலும், படிப்படியாக மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிபழக்கத்தில் இருந்து மீளுவதற்கு மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும். இதற்காக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x