Published : 29 Aug 2017 08:05 AM
Last Updated : 29 Aug 2017 08:05 AM

விஷ ஊசி போட்டு 2 குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தந்தை கவலைக்கிடம்

விஷ ஊசி போட்டு 2 குழந்தைகளை கொலை செய்த தந்தை தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருகம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகர் (42). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு மீனாட்சி (11), ரிஷிகேஷ் (8) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ல் ஜோதி தற்கொலை செய்துகொண்டார். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர், 2 குழந்தைகளையும் தனியாக கவனித்துக் கொள்ள சிரமப்பட்டதால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை சந்திரசேகரின் தந்தை அவருக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர் மகன் வீட்டுக்கு விரைந்தார். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பயந்துபோன அவர் இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு படுக்கை அறையில் குழந்தைகள் மீனாட்சி, ரிஷிகேஷ் சடலமாக கிடந்தனர். சந்திரசேகர் கவலைக்கிடமான முறையில் உயிருக்கு போராடியுள்ளார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘சந்திரசேகர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய உள்ளதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். இந்நிலையில்தான் 2 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் அறையில் ஊசி கிடந்துள்ளது. எனவே, 2 குழந்தைகளுக்கும் விஷ ஊசி போட்டுவிட்டு சந்திரசேகரும் தற்கொலைக்கு முயன்றிருக்க வேண்டும். குழந்தைகளின் பிரேத பரிசோதனையில்தான் அவர்கள் எந்த வகையான விஷத்தால் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரியவரும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x