Published : 16 Aug 2017 09:23 AM
Last Updated : 16 Aug 2017 09:23 AM

அரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழா: சங்கரய்யா, இல.கணேசன் தேசியக் கொடி ஏற்றினர்

சென்னையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கட்சிகளின் தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

நாட்டின் 71-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் பல்வேறு கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை 8 மணிக்கு நடந்த சுதந்திர தின விழாவில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

காங்கிரஸ், பாஜக

ராயப்பேட்டை திருவிக சாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை 10 மணிக்கு நடந்த சுதந்திர தின விழாவில் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தேசியக் கொடியேற்றி வைத்து காங்கிரஸ் சேவாதள தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி.க்கள் ஜே.எம்.ஆருண், பி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த விழாவில் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தேனாம்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தமாகா மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் அலுவலகம்

தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியேற்றி வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட்

தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேசியக் கொடியேற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x