Published : 27 Aug 2017 07:45 AM
Last Updated : 27 Aug 2017 07:45 AM

இரண்டு நாட்களில் ஆளுநர் அழைக்காவிடில் குடியரசுத் தலைவரை சந்திப்போம்: தினகரன் அணி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தகவல்

தமிழக ஆளுநர் இன்னும் 2 நாட்களில் எங்களை அழைக்காவிட்டால் குடியரசுத் தலைவரை சந்திப்போம் என தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களது முக்கிய நோக்கமே கட்சியை இணைக்க வேண்டும் என்பதுதான். பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தரப்பினர் கூறியதால்தான் நாங்கள் இங்கே வந்துள்ளோம்.

முதல்வர் பதவியை விட்டு விலகினால் மட்டுமே எங்கள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும். ஆளுநர் 7 நாட்களுக்குள் எங்களை அழைத்து பேச வேண்டும். இதில் தற்போது 5 நாட்கள் முடிந்து விட்டது. அவர் அழைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். 2 நாட்களில் அவர் அழைக்காவிட்டால் குடியரசுத் தலைவரை சந்திப்போம்.

தமிழகத்தில் அவர்களது ஆட்சி இருப்பதால் எங்களுக்கு எதுவும் நடக்கலாம். பாதுகாப்புக்காக நாங்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறாம். எங்களை பயமுறுத்தி பார்க்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும், துணைப் பொதுச் செயலாளர் தினகரனை ஏற்க வேண்டும், பொதுச் செயலாளர் சசிகலாவை பதவி நீக்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளில் உறுதியாக உள்ளோம்.

அதிமுக வளர்ச்சியில் பேரவைத் தலைவர் தனபாலுக்கு பெரும்பங்கு உள்ளது. அவர் முதல்வராக வந்தால் எங்களுக்கு நல்லதுதான்

எங்களது கோரிக்கை முதல்வர் பழனிசாமி மாற்றம் மட்டுமே. முதல்வரை மாற்றிய பிறகு ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் சேர்ந்திருந்தால் நல்லது என நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x