Published : 13 Aug 2017 09:39 AM
Last Updated : 13 Aug 2017 09:39 AM
இந்திய வரைபடத்தில் இருந்து காவிரிப் படுகை காணாமல் போகும் சூழல் விரைவில் உருவாகும் என பேராசிரியர் ஜெயராமன் அச்சம் தெரிவித்தார்.
இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக கடந்த ஜூன் 30-ம் தேதி கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தையடுத்து, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், இவர்கள் அனைவரும் நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
மெத்தப் படித்தவர்களின் பொய்
சிறை வளாகத்தில் பேராசிரியர் ஜெயராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அரிவாளைத் தூக்கி வீசிக் காட்டினோம், வட்டாட்சியரைக் கொலை செய்ய வந்தோம் என்றெல்லாம் எங்கள் மீது குற்றம்சாட்டியுள்ளனர். மெத்தப் படித்த அதிகாரிகள், அப்பட்டமான பொய் குற்றங்களைக் கூறி எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிணையில் வந்தாலும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 43 நாட்களாக தொழிலை இழந்து, வருமானம் இழந்து பாதிக்கப்படும் நிலையில், செலவு செய்து தினமும் திருச்சிக்கு வந்து கையெழுத்து போடுவது என்பது கூடுதல் துன்பம்.
ஆட்சியர் வர மறுத்தார்
போராட்டம் நடந்தபோது பலமுறை வேண்டுகோள் விடுத்தும், காலை 8 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை கதிராமங்கலத்துக்கு வர மறுத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் குற்றவாளி இல்லையா? அமைதியாக இருந்த போராட்டத்தில் திடீரென தடியடி நடத்தி கலவர சூழலை உருவாக்கிய காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகள் இல்லையா?
கதிராமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாழ்படுத்திய ஓஎன்ஜிசி அதிகாரிகள் குற்றவாளிகள் இல்லையா? சமூக அக்கறையுடன் களத்தில் இறங்கி கேள்வி கேட்கும் நாங்கள் குற்றவாளிகளா? மத்திய அரசு சொல்வதையெல்லாம் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு எரிவாயு வேண்டும் என்பதற்காக காவிரி படுகையை பாழ்படுத்த நினைக்கின்றனர். இந்திய வரைபடத்தில் இருந்து காவிரிப் படுகை காணாமல் போகும் சூழல் விரைவில் உருவாகும்.
இதை வலியுறுத்திப் போராடினால் மத்திய அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எங்களை கடுமையாக தண்டிப்பது சரியல்ல. தமிழக அரசு மக்களுக்காக நிற்க வேண்டுமே தவிர, எண்ணெய் நிறுவனங்களுக்காகவோ, மத்திய அரசுக்காகவோ நிற்கக்கூடாது.
சிறைத்துறைக்கு பாராட்டு
திருச்சி சிறைக்குள் சிறைத்துறையினர் எங்களிடம் கனிவுடன் நடந்து கொண்டனர். எங்கள் 10 பேரையும் மிகவும் மரியாதையாகவும், கனிவுடனும் நடத்தினர். எனினும், கைதிகளுக்கான கழிவறைகளை மேம்படுத்த வேண்டும்.
வெளியில் இருப்பதுபோன்றே, சிறையிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அதையும் தீர்க்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT