Published : 11 Aug 2017 01:50 PM
Last Updated : 11 Aug 2017 01:50 PM

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இட மாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் தடை உத்தரவு

 

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இட மாற்றம் செய்யத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்னெடுத்து வரும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இட மாற்றம் செய்யத் தமிழக அரசு முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், +1 படிக்கும் மாணவரின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ''11-ம் வகுப்பைப் பொதுத் தேர்வாக மாற்றித் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அளவில் அனைத்து மாநில மாணவர்களுடன் போட்டியிட ஏதுவாக பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் இன்னும் தீராமல் உள்ளது. இந்நிலையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இருப்பவர்கள், பணி முடியும் வரை குழுவில் இருந்தால்தான் பாடத்திட்டப் பணி முழுமையடையும். அதில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.

சில முரண்பாடுகள் காரணமாக அவரை மாற்றத் தமிழக அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் அவரை இடமாற்றம் செய்யத் தடை விதிக்க வேண்டும் மற்றும் குழுவில் இருப்பவர்கள் யாரையும் இட மாற்றம் செய்ய அனுமதிக்கக்கூடாது'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ''பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இட மாற்றம் செய்யத் தடை விதித்தும், பாடத் திட்டப் பணிகள் முடிவடையும் வரை குழுவினர் யாரையும் இட மாற்றம் செய்யக் கூடாது" என்றும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x