Published : 17 Aug 2017 08:20 PM
Last Updated : 17 Aug 2017 08:20 PM

ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது கண்துடைப்பு நாடகம்: ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து உண்மையான விசாரணை நடைபெற முதல்வரும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 8 மாதங்கள் கழித்து, அவரது மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு 'ஊழல் அணிகள் சங்கமம்' ஆவதற்காக அரங்கேற்றப்பட்டுள்ள கண்துடைப்பு நாடகம்.

திமுகவின் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை எழுப்பிய போதும், அதற்கெல்லாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மர்ம மரணத்தின் தடயங்கள், வீடியோ காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்று அமைதி காத்தவர்கள்தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 22.9.2016 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5.12.2016 அன்று மரணம் அடையும் வரை அத்தனை ரகசியங்களையும், மர்மங்களையும் மறைத்தவர்கள் இந்த இருவரும் மட்டுமல்ல- அமைச்சர்களும்தான். அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 11.10.2016 முதல் ஜெயலலிதாவின் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்து முதல்வர் பொறுப்பிலே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு 5.2.2017 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு 40 நிமிடங்கள் தியானம் இருந்து விட்டு திடீர் ஞானோதயம் வந்தவராக பொறுப்பில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16 ஆம் தேதி முதல்வராக நியமிக்கப்படும் வரை விசாரணைக்கான எந்த உத்தரவும் வெளியாகவில்லை.

அதற்கு மாறாக 6.2.2017 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை அழைத்து வந்து தமிழக அரசு மருத்துவரையும் பங்கேற்க வைத்து, 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை', என்பதாக விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பே நடைபெற்றது. அப்போதும் முதல்வராக பதவியில் நீடித்தவர் ஓ.பன்னீர்செல்வம்தான். பிறகுதான் 'தர்மயுத்தம்' என்று புதிய அவதாரம் எடுத்து 'ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்' என்று திடீரென்று கோரிக்கை வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16-ம் தேதியிலிருந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. விசாரணை கமிஷனை அமைக்கவும் முன் வரவில்லை. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று கூறிய பிறகும் கூட இப்படியொரு விசாரணை கமிஷனை அமைக்கவில்லை. மாறாக, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று பேட்டியளித்த டாக்டர் சீதாவை ஒரு பெண் என்றும் பாராமல் கைது செய்து சிறையில் அடைத்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான்.

இப்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்ட போதெல்லாம் 'அது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது' என்று கூறி தட்டிக் கழித்தது மட்டுமல்ல, தடயங்களை முழுவதும் மறைக்க உதவி செய்தவர்கள்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும்.

செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து டிசம்பர் 5 ஆம் தேதி வரை முதல்வரின் பொறுப்புகளை கவனித்து வந்த பன்னீர்செல்வம், முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் குழு அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மர்மங்களை மறைத்தார்கள்.

பிறகு 5.12.2016 முதல் 16.2.2017 வரை இருவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை மறைத்தார்கள். 16.2.2017 முதல் இன்றுவரை ஆறு மாதங்களுக்கு மேல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை இரும்புத் திரை போட்டும், கைது நடவடிக்கைகள் எடுத்தும் முற்றிலும் மறைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டணிதான் இப்போது விசாரணை கமிஷன் அறிவித்திருப்பதிலும் தொடருகிறது.

ஊழல்களின் ஊற்றுக்கண்களாக இருதரப்பும் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி 'தர்மயுத்தம்' என்று நாடகம் போடுவதும், ஊழல் கடலில் மூழ்கி நீச்சலடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அணி 'ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன்' என்பதும் தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை முன் வைத்து தர்மயுத்தத்தை முடித்துக் கொண்டு, இரு அணிகளும் இணைந்து, 'சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தை' தொடங்கப் போடுகின்ற மோசடித் திட்டம் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, இந்தக் கண்துடைப்பு நாடகத்தை கைவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையில் ஆர்வமும், அக்கறையும் இருக்குமென்றால், மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை முறையாக நடக்க, இந்த மர்ம மரணத்திற்கு துணை போன அல்லது கடந்த 8 மாதங்களாக அது தொடர்பான சாட்சியங்கள், தடயங்கள் மறைப்பதற்கு மனப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்கிய ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் தொடர்பவர்கள் - புதிதாக இடம்பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, புதிய அமைச்சரவை ஒன்றை அமைத்து, அதன்கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மர்ம மரணம் குறித்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு வழிவிட்டு, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x