Published : 23 Aug 2017 09:08 AM
Last Updated : 23 Aug 2017 09:08 AM

புதுச்சேரியிலும் இணைந்த அதிமுக அணிகள்: 4 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிமுகவின் 2 அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் பங்கேற்கவில்லை.

புதுச்சேரி அதிமுகவில், மாநில செயலாளர் புருஷோத்தமன் முதல்வர் கே.பழனிசாமி அணிக்கு ஆதரவாகவும், முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவந்தனர். இவர்களைத் தவிர அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், அசானா, வையாபுரி மணிகண்டன் ஆகிய 4 பேரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்தன. இதைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் நேற்று அதிமுக அணிகள் இணைந்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஓம்சக்தி சேகரும், மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமனும் கூட்டாக அறிவித்தனர்.

அப்போது இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு வராத எம்எல்ஏக்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடாது. இது தற்காலிகமான நிகழ்ச்சி. ஏற்கெனவே அவர்கள் தமிழக முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையை ஏற்பவர்களே அதிமுகவினர். ஏற்காதவர்கள் அதிமுகவில் இருக்க முடியாது. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இணைந்து செயல்படுவோம். சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் அனைத்திலும் இணைந்து பணியாற்றுவோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x