Published : 05 Aug 2017 01:05 PM
Last Updated : 05 Aug 2017 01:05 PM

ராகுல் கார் மீது கல்வீச்சுக்கு எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் கைது

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு சம்பவம் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கைது செய்யப்பட்டார். அவருடன் காங்கிரஸார் சிலரும் கைதாகினர்.

குஜராத் மாநிலத்தில் கடுமையான வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல எதிர்கட்சித் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று (வெள்ளிக்கிழமை) சென்றிருந்தார்.

அப்போது ராகுல்காந்தி கார் மீது பாஜக ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது காரின் கண்ணாடி உடைந்துள்ளது, அவருடன் சென்ற சிறப்புப் பாதுகாப்புப் படை காவலர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று (சனிக்கிழமை) காலை தனது ஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை அப்புறப்படுத்திய போலீஸார் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரை கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "எங்கள் கட்சித் தலைவரைக் குறிவைத்து அவர் செல்லும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் ஜனநாயக விரோதமானது. காட்டுமிராண்டித்தனமானது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதோ அல்லது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலோ பாஜகவினர் மீது எப்போதாவது நாங்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறோமா? பாஜகவின் வன்முறை தாக்குதலைக் கண்டித்தே இந்த சாலை மறியலை நடத்துகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x