Published : 31 Aug 2017 09:55 AM
Last Updated : 31 Aug 2017 09:55 AM

76 மீனவர்கள் விடுதலைக்கு இலங்கை அரசு பரிந்துரை: படகுகளை விடுவிக்க மறுப்பு

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது. அதே சமயம், படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது.

கடந்த ஜுன் முதல் வாரத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 80 தமிழக மீனவர்கள் அத்துமீறி தங்களின் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அனைவரும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

அமைச்சர்கள் இலங்கை பயணம்

இந்நிலையில், கொழும்பில் இன்று (ஆக.31) தொடங்க உள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் 2 நாள் பயணமாக இலங்கை செல்கின்றனர்.

அங்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் விக்னேஷ்வரன் ஆகியோரை சந்திக்கவுள்ளனர். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருதரப்பும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லெண்ண நடவடிக்கை

இதையொட்டி நல்லெண்ண அடிப்படையில், இலங்கை சிறைகளில் உள்ள 76 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது. அதேசமயம் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

இலங்கை சிறைகளில் உள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், மண்டபத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 46 மீனவர்கள் என 76 பேர் ஓரிரு நாட்களில் பருத்தித்துறை மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x