Published : 20 Aug 2017 04:03 PM
Last Updated : 20 Aug 2017 04:03 PM
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினமான இன்று அவர் மணிமண்டபத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக பாளையங்கோட்டை செல்லும் முன் சங்கரன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ''அதிமுக அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். தற்போது அதில் இன்னும் ஒருபடி முன்னேறி இருக்கிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்'' என்றார்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது சட்ட ரீதியாக தவறு என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், 'ஸ்டாலின் சட்டம் படித்த வழக்கறிஞர் அல்ல' என்றார்.
மேலும், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்த இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், ''நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி மிகச் சிறந்த நடிகர். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT