Published : 27 Aug 2017 07:48 AM
Last Updated : 27 Aug 2017 07:48 AM

எந்த தயவும் இல்லாமல் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்போம்: முதல்வருக்கு குன்னம் எம்எல்ஏ யோசனை

தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தால், ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் தெரி வித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் ஆர்.டி.ராமச்சந்திரனை, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கடந்த 24-ம் தேதி தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில் நேற்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த, எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரே கட்சிக்குள் (அதிமுக) இருந்துகொண்டு எம்எல்ஏக்கள் ஊழல் செய்கின்றனர் எனக் கூறுவது மிக வெட்கக்கேடானது. அதிமுகவில் சாதிப் பிரச்சினையை ஏற்படுத்தி பிளவை உண்டாக்க முயல்கிறார் தினகரன். தமிழக முதல்வர் எந்த தயவும் இல்லாமல் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம். முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில், ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஆட்சியை மீண்டும் கொண்டு வர தயாராக உள்ளோம்.

சசிகலாவை குறிப்பிடாதது ஏன்?

தினகரன் பக்கம் உள்ளவர்கள் வேண்டுமானால் சசிகலா பெயரைச் சொல்லி வாக்கு சேகரிக்கட்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் ஏன் சசிகலா பெயரைச் சொல்லி வாக்கு சேகரிக்கவில்லை? யாரும் ஓட்டு போடமாட்டார்கள் என்பதுதானே காரணம் என்றார்.

மதிப்பிழந்த பண நோட்டுகள்

இதேபோன்று, அதிமுக இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து தினகரனால் நீக்கப்பட்ட திருச்சி எம்பி ப.குமார் நேற்று ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சசிகலாவும், தினகரனும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1,000, 500 ரூபாய் நோட்டு போன்றவர்கள். அவர்கள் பதவியே செல்லாது.

எனவே, அவர்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினரைக்கூட நீக்க முடியாது. ஜெயலலிதா எனக்குக் கொடுத்த பதவியை நீக்க தினகரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றார்.

அரசை தோற்கடிக்க முடியாது

மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

யார், எந்த அணிக்கு சென்றாலும் இந்த அரசுக்கு உறுதுணையாகவே இருப்பார்கள். இந்த அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும், அதிமுக அரசை தோற்கடிக்க முடியாது. இந்த அரசு 5 ஆண்டு காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x