Published : 04 Aug 2017 08:38 AM
Last Updated : 04 Aug 2017 08:38 AM

மெரினா கடற்கரையில் இருந்த சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றம்: மணிமண்டபத்தில் நிறுவப்படுகிறது

மெரினா கடற்கரையில் இருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை நேற்று முன்தினம் நள்ளிரவில் அகற்றப்பட்டது. அந்த சிலை புதிதாக கட்டப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தில் நிறுவப்பட உள்ளது.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தமிழக அரசு சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை கடந்த 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிலையில், அந்த சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, சிவாஜி சிலையை அகற்ற உயர் நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியது.

இதற்கிடையே, சென்னை அடை யாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, தொடங்கப்பட்ட மணிமண்டப பணிகள் அண்மையில் நிறைவு பெற்றன.

எனவே, சிவாஜி சிலை எந்த நேரத்திலும் அகற்றப்படலாம் என்ற நிலையில், சிலையை காமராஜர் சாலையில் இருந்து அகற்றக்கூடாது என பல அரசியல் கட்சிகள், ரசிகர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு சிவாஜி சிலையை அகற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. நள்ளிரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டு சிவாஜி சிலை அகற்றப்பட்டது. கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு மணிமண்டபத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. சிவாஜி சிலை இடம் மாற்றப்பட்டுள்ளதால், விரைவில் மணிமண்டபத்தை திறந்து, சிவாஜி சிலையையும் அங்கு திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x