

கோவை சிங்காநல்லூர் பகுதியில் மத்திய பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள். | படம்: ஜெ.மனோகரன் |
கோவை: கோவையில் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைக் கிழித்ததாக பாஜகவைச் சேர்ந்த 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்க வில்லை எனக்கூறி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பாஜக-அதிமுக தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி முட்டை என்றும், ‘பட்ஜெட் 2026 ஒரு பூஜ்யம்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக சிங்காநல்லூர், கணபதி பகுதிகளில் அதிக அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, பாஜக இளைஞரணியை சேர்ந்த சிலர், மத்திய பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைக் கிழித்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சுவரொட்டிகளைக் கிழித்த பாஜகவினரைக் கைது செய்தனர். சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேர், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 9 பேர் என 23 பேர் கைது செய்யப்பட்டனர்.