Published : 18 Jul 2017 10:06 AM
Last Updated : 18 Jul 2017 10:06 AM

தொடர்ந்து பல ஆண்டுகளாக ரயில் நிலையங்களில் மூடியிருக்கும் உணவகங்கள்: உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் பயணிகள் அவதி

ரயில் நிலையங்களில் இருக்கும் உணவகங்கள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், உணவு வாங்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் சென்ட்ரலுக்கு அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு இங்கிருந்து விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

மேலும் எழும்பூர் ரயில் நிலையம்,

சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே இருந்த உணவகங்கள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. இதனால், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் உணவு பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக ரயில் பயணிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “எழும்பூர் ரயில் நிலையத்தின் உள்ளே ஹோட்டல்கள் இருந்தபோது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். தற்போது ரயில் நிலையத்தின் வெளியில் உள்ள ஹோட்டல்களில் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. அங்கு ஒரு காபி ரூ.20க்கு விற்கப்படுகிறது. வாங்கும் உணவு பொருட்களும் தரமானதாக இல்லை. எனவே ரயில் நிலையத்துக்குள் மீண்டும் ஹோட்டல்களை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் சிற்றுண்டி அல்லது உணவகங்கள் அமைப்பதற் கான உரிம கட்டணம் சமீபத்தில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதிக தொகை கொடுத்து, உணவகங்களை அமைக்க யாரும் முன்வருவதில்லை. எனவே, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில் ரயில்வே துறை உரிம கட்டணத்தை குறைக்க வேண்டும்’’ என்றார்.

விரைவில் திறக்க நடவடிக்கை இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ரயில் பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களை வழங்கும் வகையில் ரயில்வே அமைச்சகம் பல்வேறு மாற்றங்களைச் செய்து புதிய உணவு தயாரிப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. கட்டண வசூலைத் தடுக்கவும், பயணிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, உணவு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து பட்டியலை வெளியிட்டுள்ளோம். இத்திட்டம் மூலம் பயணிகளுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்களை விரைவில் வழங்கவுள்ளோம். இதற்கான பணிகளை ஐஆர்சிடிசி மேற்கொள்ளவுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x