Published : 22 Jul 2017 08:22 AM
Last Updated : 22 Jul 2017 08:22 AM

டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் டிடிவி. தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கிற்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவும் டிடிவி. தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ. 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ. 44 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறு வனத்தின் பெயரில் முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு, தற்போது அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள டிடிவி. தினகரன் மீது அமலாக்கப்பிரிவினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கைப் பதிவு செய்தனர்.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்கு வதற்காக டிப்பர் இன்வெஸ்ட் மென்ட், டெண்டி இன்வெஸ்ட் மென்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் பார்க்லே வங்கியில் ரூ. 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ. 1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாகவும் டிடிவி. தினகரன் மீது மேலும் ஒரு வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிடிவி. தினகரன் மீதான இந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 20 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி குற்றச்சாட்டு, பதிவு செய்யப்பட்டது.

தனக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்குத் தடை கோரி டிடிவி. தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், டிடிவி. தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த ஜூலை 7-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்தத் தடையை நீக்கக்கோரி அமலாக்கத் துறையி்ன் சார்பில் அதே நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தனக்கு அபராதமாக விதிக்கப்பட்ட ரூ. 28 கோடியை எதிர்த்தும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் டிடிவி. தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று டிடிவி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கையும், அபராதத்தையும் ரத்து செய்ய மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அந்நியச் செலாவணி மோசடி வழக்கிற்கு டிடிவி. தினகரன் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x