Published : 17 Jul 2017 03:24 PM
Last Updated : 17 Jul 2017 03:24 PM

கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: முத்தரசன்

நடிகர் கமல்ஹாசனை எச்சரிக்கும் வண்ணம் மிரட்டும் பாணியில் பேட்டி அளிப்பதை, கருத்து கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மிகச் சிறந்த திரைப்பட கலைஞர் நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன், தமிழ்நாட்டில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்திருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். இது கருத்து சுதந்திரத்தின் மிகவும் இயல்பான அரசியல் சட்ட ரீதியான வெளிபாடுதான்.

அத்துடன் அவர் உண்மையைத் தான் கூறி உள்ளார் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தமான கருத்தாகும். கை புண்ணிற்குக் கண்ணாடி தேவையில்லை. அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பதை, கூவத்தூர், குட்கா, ஆர்கே நகர் இடைத்தேர்தல் என அனைத்தும் அம்பலப்படுத்தின. சாதாரண குடிமக்களிலிருந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புவரை, தமிழ்நாட்டு நிர்வாக நடைமுறையில் ஊழல் மலிந்திருப்பதை வெளிப்படுத்தி வருகின்றன.

நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு மிரட்டுகிற முறையில் எதிர்மறை கருத்துக்கள் கூறுவது கண்டனத்திற்குரியதாகும். நடிகர் கமல்ஹாசனை குறிவைத்து, மிரட்டும் வகையில் அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை, சொல்லாடல்களை அமைச்சர்களே வெளிப்படுத்துவது என்பது ஏற்புடைதல்ல.

நடிகர் கமல்ஹாசனை எச்சரிக்கும் வண்ணம் மிரட்டும் பாணியில் பேட்டி அளிப்பதை, கருத்து கூறுவதை, நிறுத்தி கொள்ளுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்வதோடு ஆட்சியாளர்கள் எத்தகைய உயரத்தில் இருந்தாலும் கருத்துகூற, குடிமக்களுக்கு முழுஉரிமை உண்டு என்பதனையும் அத்தகைய கருத்துரிமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x