Published : 18 Jul 2017 07:54 AM
Last Updated : 18 Jul 2017 07:54 AM

ரூ. 2.50 கோடி கடன் விவகாரம்: நடிகர் சரத்குமார், ராதிகாவுக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம், நடிகர் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த ‘இது என்ன மாயம்’ என்ற படத்தை தயாரித்தது.

இதற்காக ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு ரூ. ஒன்றரை கோடி கடன் வாங்கியது. இப்பணத்தை முறையாக திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை மற்றும் அடுத்த படத்தின் உரிமையை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே நிறுவனத்தில் கூடுதலாக ரூ.1 கோடி கடன் வாங்கப்பட்டது. அதற்காக சென்னை தி.நகரில் உள்ள நிலத்துடன் கூடிய வீடு அடமானமாக கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே, கொடுத்த வாக்குறுதியை மீறி ‘பாம்புச் சட்டை’ என்ற படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதனால் தங்களுக்கு தரவேண்டிய ரூ.2.5 கோடியை வட்டியுடன் தரவும், அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை கோரியும் ராடியன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த மே மாதம் கடனுக்காக அடமானம் வைத்த சொத்துகளை சரத்குமாரும், ராதிகாவும் விற்க தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், அடமானம் வைத்த சொத்துகளை விற்க தடை விதித்து உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன் நேற்று பிறப்பித்த உத்தரவில், ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து, ரூ. 2 லட்சம் அபராதம் விதி்த்தார். இந்த அபராதத் தொகையை வரும் ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் இருவரும் ராடியன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் எனவும், மேலும் ராடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x