Published : 18 Jul 2017 12:08 PM
Last Updated : 18 Jul 2017 12:08 PM

நீட் தேர்வு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

நீட் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதலை விரைவில் பெற அரசு அழுத்தம் தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் விவகாரத்தில் சட்ட ரீதியாக, அரசியல் ரீதியாக தமிழக அரசு போராடி வருகிறது என்று பதில் அளித்தார்.

அந்தப் பதில் திருப்தியானதாக இல்லை என்று கூறி திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்ய அதிமுக அரசு தவறிவிட்டது. தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி நீட் தேர்வு பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று என்னை சந்தித்தனர். நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் குடியரசுத் தலைவரை சந்திக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். தமிழகத்துக்கு விலக்கு அளிக்காவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதுகுறித்து பரிசீலித்து முடிவெடுப்பதாக தெரிவித்தோம்.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மசோதா நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதல் பெற்று வெற்றி பெற்றதைப் போல, நீட் தேர்வு விவகாரத்திலும் வெற்றி பெற வேண்டும்'' என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x