Published : 30 Jul 2017 09:47 AM
Last Updated : 30 Jul 2017 09:47 AM

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை திடீர் சரிவு: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.35-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால், அதன் விலை நேற்று திடீரென சரிந்து கிலோ ரூ.35 க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தில் தக்காளி சாகுபடி குறைவு என்பதால், மாநிலம் முழுவதும் தக்காளி தேவைக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

கடந்த இரு மாதங்களாக அந்த மாநிலங்களில் நிலவிய வறட்சி, வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நல்ல விலை கிடைக்கிறது என்பதற்காக அங்கு தக்காளி அனுப்பி வைக்கப்பட்டது, கடந்த இரு மாதங்களில் இடம்பெற்ற முகூர்த்த நாட்கள் ஆகிய காரணங்களால் தக்காளி விலை கிலோ ரூ.100 வரை உயர்ந்தது.

இதனால் பொதுமக்கள், சமையலில் தக்காளி பயன்பாட்டை குறைத்துக்கொண்டனர். ஹோட்டல் களிலும் தக்காளி சட்னி வைப்பது நிறுத்தப்பட்டது.

மலிவு விலையில் விற்பனை

இந்நிலையில் வெளிச் சந்தையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக கூட்டுறவுத் துறை சார்பில், பண்ணை பசுமை கடைகளில் ரூ.66-க்கு மலிவு விலையில் விற்கப்பட்டது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளிலும் மலிவு விலை தக்காளி விற்கப்பட்டது. நகரும் கடைகள் மூலமாகவும் பல்வேறு இடங்களில் மலிவு விலையில் தக்காளி விற்கப்பட்டது.

இந்நிலையில், ஆடி மாதம் பிறந்ததிலிருந்து, முகூர்த்த நாட்கள் எதுவும் வராததால், தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று திடீரென விலை சரிந்து ரூ.35-க்கு விற்கப்பட்டது.

மேலும் ஜாம்பஜார் போன்ற சில்லறை விற்பனை கடைகளில் கிலோ ரூ.50-க்கும், பண்ணை பசுமை கடைகளில் ரூ.45-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கடந்த ஒரு மாதம் முன்பு 32 லோடு தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தன. இது தற்போது 45 லோடாக அதிகரித்துள்ளது. அதனால் விலை குறைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x