Published : 27 Jul 2017 09:46 AM
Last Updated : 27 Jul 2017 09:46 AM

சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்: ‘நபார்டு’ வங்கி விழாவில் முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தல்

சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவு கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என்று முதல்வர் கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) 36-வது நிறுவன நாள் கொண்டாட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுகள் வழங் கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் கே.பழனிசாமி, சிறப்பாக செயல்பட்ட சுயஉதவிக் குழுக்கள் மற்றும் அரசு, தனியார் துறை வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:

விவசாய வளர்ச்சிக்காவும், ஊரக மேம்பாட்டுக்காகவும் கடந்த 35 ஆண்டுகளாக நபார்டு வங்கி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்து தமிழகம் வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் குடிமராமத்துப் பணி களுக்காகவும், நீராதாரங்களின் மேம்பாட்டுக்காகவும் நபார்டு வங்கியின் நிதியுதவியை அரசு கோரியுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 41 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்படும்.

எளிதில் அழுகக் கூடிய காய்கறிகள், பழங்கள் விநியோக தொடரமைப்பு மேலாண்மைக்கு நபார்டு வங்கி ரூ.398 கோடி கடன் வழங்கியுள்ளது. இத்திட்டம் நாட்டிலேயே ஒரு முன்னோடித் திட்டமாகும். பருவகால மாற்றங்களை எதிர்கொள்வது விவசாயிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது.

இதற்காக தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து நபார்டு வங்கி ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. இதனால் விவசாயிகள், மீனவர்கள் பயனடைவர்.

‘நீரா’ உற்பத்தி திட்டத்துக்கான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உணவுப் பொருள் பதப்படுத்தும் நிதியில் இருந்து தமிழக அரசுக்கு உதவ வேண்டும். தமிழகத்தின் 8 லட்சம் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ‘ரூபே டெபிட் கார்டு’ விரைவில் வழங்கப்படும்.

சுயஉதவிக் குழுக்களுக்கு தற்போது வழங்கப்படும் கடன் உதவி ரூ.18 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில் வங்கிகளின் பங்களிப்பு ரூ.6,300 கோடியாக உள்ளது. வரும் ஆண்டுகளில் அனைத்து வங்கிகளும் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவு கடன் வழங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா பேசும்போது, ‘‘தமிழகத்தில் 9 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.6,368 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின்கீழ் 41 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடி இன மக்களின் வளர்ச்சிக்காக ரூ.40 கோடி நிதியுதவியை நபார்டு வங்கி வழங்கியுள்ளது’’ என்றார்.

விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.ஏ.செங் கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x