Published : 15 Sep 2016 02:47 PM
Last Updated : 15 Sep 2016 02:47 PM
இரண்டு நாளில் காவிரி நீர் மேட்டூரில் விடுவிக்கப்பட்டு புதுவையின் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலர் மனோஜ் பரிதா தெரிவித்தார்.
புதுச்சேரியில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து புதுவைக்கு உரிய பங்கை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் எந்த சிக்கலும் இல்லை. எப்போதும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் போதிய நீர் இல்லாததால் புதுவை மாநிலத்துக்கான பங்கு இதுவரை பெறப்படவில்லை.
கடந்த வாரம் காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன். அதன்படி முதலில் 15000 கன அடியும், தற்போது 12000 கன அடி நீரையும் கர்நாடக அரசு திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி புதுவைக்கு முறையே 330 கன அடி, 270 கன அடி நீர் கிடைக்க வேண்டும். மேட்டூர் அணைக்கு தற்போது நீர் வந்துள்ளது. இரண்டு நாளில் காவிரியில் நீர் விடுவிக்கப்பட்டு புதுவையின் பங்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் வரும் 19-ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் கேரளம், கர்நாடகம், தமிழகம், புதுவை மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் தற்போதுள்ள நீர் இருப்பு நிலைமைக்கேற்ப இறுதி உத்தரவு வெளியாகும்.
கடந்த ஒரு மாதத்தில் 33 பேர் டெங்கு பாதிப்புக்காக சிகிச்சை பெற்றனர். இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து வந்துசெல்வோர் அதிகம் உள்ளதால் டெங்கு பாதிப்பு புதுவையில் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT