Published : 13 Jun 2017 12:54 PM
Last Updated : 13 Jun 2017 12:54 PM
நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதாக நேற்று வீடியோ பதிவு ஒன்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது, அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.
எனவே, எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என அவர் முறையீடு செய்தார்.
இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி வலியுறுத்தினார். இதனையடுத்து திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஏற்கெனவே நிலுவையில் உள்ள திமுக வழக்கையும் விரைந்து விசாரிக்குமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT