Published : 11 Jun 2016 07:41 PM
Last Updated : 11 Jun 2016 07:41 PM

மோடி அரசின் தவறான செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது: டி.ராஜா குற்றச்சாட்டு

மோடி அரசின் தவறான செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 2 ஆண்டுகளில் ஏதோ சாதித்து விட்டதைப் போல பாஜகவினர் தம்பட்டம் அடித்து வருகிறார்கள்.

ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவ மதவெறி சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசு அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் நாட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. தொழில், விவாசயம், சேவைத் துறை என அனைத்துத் துறைகளிலும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. கருப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி அரசின் தவறான செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை இப்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்க ஆதரவு நிலையை எடுத்துள்ளதையே அவரது பேச்சு உணர்த்துகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும் மோடி எதையும் வெளிப்படையாக பேசுவதில்லை. இந்திய வெளியுறவுக் கொள்கை அமெரிக்க சார்புடையதாக மாறி வருகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. பாகிஸ்தான், சீனா போன்ற அண்டை நாடுகளுடன் இந்திய இணக்கமான நல்லுறவை பேணவில்லை. அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த மாநிலக் குழுக்களை கேட்டுக் கொண்டுள்ளோம். வரும் செப்டம்பர் 2-ம் தேதி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும்'' என்று டி.ராஜா கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x