Published : 12 Sep 2016 10:35 AM
Last Updated : 12 Sep 2016 10:35 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலி?- டெங்கு பீதியில் ஆர்.கே.பேட்டை

திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலினால் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆர்.கே.பேட்டை சுற்று வட்டார பகுதி மக்கள், ‘டெங்கு’ காய்ச்சல் பீதியில் உறைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், கடந்த 25 நாட்களில் காவேரிராஜபுரம், கீரப்பாக்கம், மீஞ்சூர், பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 சிறுவர்கள், 2 சிறுமிகள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 7-ம் தேதி திருவள்ளூர்-மாரப்பன் தெருவைச் சேர்ந்த 2 வயது குழந்தை தீபக், வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும், குழந்தை தீபக் ஆஸ்துமாவினால் உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனைகள், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்டவற்றில் வைரஸ் காய்ச்சல் காரணமாக 130-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு, மருத்துவ முகாம், தொற்று நோய் தடுப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அருகே கீழ்பாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபாபு என்பவரின் 3 வயது பெண் குழந்தை மன்விதா, கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மன்விதா, கடந்த 9-ம் தேதி காலை வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் கடுமையானதால் அன்று இரவே சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குழந்தை மன்விதா உயிரிழந்துள்ளார்.

அவர், வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், கீழ்பாலாபுரம் உள்ளிட்ட ஆர்.கே.பேட்டையை சுற்றியுள்ள கிராம மக்கள் ‘டெங்கு காய்ச்சல்’ பீதியில் உறைந்துள்ளனர். எனினும், டைபாய்டு காய்ச்சலால் குழந்தை மன்விதா உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ‘தி இந்து’ விடம் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: சிறுமி மன்விதா டைபாய்டு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்த கடந்த 4-ம் தேதியே, கீழ்பாலாபுரம் பகுதியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பெரியவர்கள் இருவ ருக்கு மட்டுமே வைரஸ் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் குணமடைந்துவிட்டனர்.

கீழ்பாலாபுரத்தில், கொசு மருந்து தெளித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், மருத்துவ முகாம் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதனால், கீழ்பாலா புரம் பகுதியில் தற்போது யாருக் கும் தொற்று நோய் பாதிப்புகள் இல்லை. இருப்பினும், கீழ்பாலா புரம் பகுதி, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x