Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

சென்னை மாநகர பஸ் நடத்துநரை காலணியால் அடித்த பெண் பயணி- பஸ்ஸை நிறுத்தாததால் ஆத்திரம்

மாநகரப் பேருந்து நடத்துநரை பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவர் காலணியால் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டலூரில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு செல்லும் பி18 பஸ் வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு புறப்பட்டது. பஸ்ஸின் ஓட்டுநராக ரமேஷ்குமாரும், நடத்துநராக மூர்த்தியும் (40) இருந்தனர். பல்லாவரம் பஸ் நிறுத்தத்தில் ராதிகா (37) என்ற பெண் இந்த பஸ்ஸில் ஏறி எல்.ஐ.சி.க்கு டிக்கெட் எடுத்தார்.

இரவு 10.30 மணியளவில் அண்ணாசாலை வானவில் அருகே வந்தபோது, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த சில பயணிகள் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கை காட்டினர். ஆனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ராதிகா, 'பயணிகள் கை காட்டுவதை பார்த்தும் ஏன் பஸ்ஸை நிறுத்தாமல் செல்கிறீர்கள்' என்று நடத்துநர் மூர்த்தியிடம் கேட்டாராம். அதற்கு நடத்துநர், 'இது விரைவுப் பேருந்து, வானவில் பஸ் நிறுத்தத்தில் நிற்காது' என்று கூறினாராம். இதனால் ராதிகாவுக்கும், நடத்துநர் மூர்த்திக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட ராதிகா தான் அணிந்திருந்த காலணியை கழற்றி மூர்த்தியை அடித்ததாக கூறப்படுகிறது.

உடனே ஓட்டுநர் ரமேஷ்குமார் பஸ்ஸை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் நிறுத்த, ராதிகா மீது நடத்துநர் மூர்த்தியும், நடத்துநர் மூர்த்தி மீது ராதிகாவும் புகார் கொடுத்தனர். இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x