Published : 13 Jun 2016 08:12 AM
Last Updated : 13 Jun 2016 08:12 AM
தமிழக தொழிலாளர் துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைத் தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.
பின்னர், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் சிறப்புரையாற்றி பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வீட்டு வேலைகள், உணவகங்கள் உள்பட அனைத்து வகையான நிறு வனங்களிலும் குழந்தைத் தொழிலா ளர் சட்டத்தின் கீழ் 6,85,092 ஆய் வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் 124 வழக்குகள் தொடரப்பட்டு, அதில் 100 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு, ரூ.10.33 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு பயிற்சி மையங் கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, 325 சிறப்பு பயிற்சி மையங்களில் 9,378 மாணவர்கள் படித்து வருகின்றனர். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்று, தற்போது மேற்படிப்பு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தொழிலாளர் ஆணையர் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் ப.சந்தரமோகன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் பி.போஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT