Published : 05 Jul 2016 07:54 AM
Last Updated : 05 Jul 2016 07:54 AM

அடைக்கப்பட்ட குடிநீரின் தரம்: அரசு அறிக்கை அளிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னையில் விற்பனை செய்யப்படும் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கேன்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீர், குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. அதன் தரத்தை ஆய்வு செய்தபோது, அதில் நச்சுத்தன்மை இருப்பது தெரியவந்திருப்பதாக, தெலுங்கு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில் நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு, தாமாக முன்வந்து, வழக்காக பதிவு செய்து, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அப்போது, தெலுங்கு நாளிதழில் கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கு, இந்திய தரநிர்ணய ஆணையம், தமிழக உணவு பாதுகாப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சென்னையில் தற்போது விற்கப்படும் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்தும், தற்போதைய நிலை குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

மனு மீதான விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x