Published : 22 Jan 2017 11:11 AM
Last Updated : 22 Jan 2017 11:11 AM
குடியரசு தினத்தன்று காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தேசிய கொடி ஏற்றப்படும். இதை முன்னிட்டு ஆயுதப்படை பிரிவு போலீஸார் ஆண்டு தோறும் ஜனவரி 19, 21, 24 ஆகிய தேதிகளில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆண்டும் அதே தேதியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்று சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் அறிவித்திருந்தார். குடியரசு தினத்தன்றும், ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் 3 நாட்களிலும் காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு போராடி வருவதால் 19-ம் தேதி நடைபெற இருந்த முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று இரண்டாவது நாள் ஒத்திகை நிகழ்ச்சி மெரினாவில் நடைபெறுவதாக இருந்தது. அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தொடர்ந்து வருவதால் தீவுத்திடல் பின்புறம் உள்ள மன்றோ சிலையருகே நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 3-ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி எங்கு நடைபெறும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT