Published : 14 Jun 2017 04:49 PM
Last Updated : 14 Jun 2017 04:49 PM
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொசஸ்தலை ஆற்று நீரானது ஆந்திராவின் சித்தூர் பகுதியிலிருந்து தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெளியகரம் ஏரிக்கு பெரிய வரவு கால்வாய் வழியாக சுமார் 4 கி.மீ வரை தண்ணீர் வந்தடைகிறது. இந்த ஆற்று நீரானது திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் விவசாயத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கின்றது.
கொசஸ்தலை ஆற்றிலிருந்து வரும் தண்ணீரானது தடுப்பணை கட்டப்படும் போது வெளியகரம் ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கப்படும். குறிப்பாக இந்தப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் இந்த ஆற்று நீரை பெரிதும் நம்பியிருக்கின்ற சுமார் 10 கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
இந்த பெரிய வரவு கால்வாயின் குறுக்கே ஆந்திர அரசு 5 பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவதற்கு பணிகளைத் தொடங்கியுள்ளது. இதனை தமிழக அரசு ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆந்திர அரசு நமது மாநில அரசின் அனுமதி பெறாமல் எவ்வாறு தடுப்பணை கட்ட ஆரம்பித்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டாமல் இருப்பதற்கு தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT