Published : 04 Apr 2017 12:04 PM
Last Updated : 04 Apr 2017 12:04 PM

கோவில்பட்டி அருகே செல்பேசி கோபுரம் மீது ஏறி இளைஞர்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே புதிதாக அமைத்த செல்பேசி கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி இளைஞர்கள் அந்த கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்பையூரணி ஊராட்சி, வடக்கு புதுக்கிராமத்துக்கு உட்பட்ட திருமங்கை நகரில் தனியார் நிறுவனம் சார்பில் செல்பேசி கோபுரம் அமைக்கும் பணி, கடந்த 2014-ல் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அப்போதைய சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இதையடுத்து பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் செல்பேசி கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. இதைக்கண்டித்து அப்பகுதி இளைஞர்கள் பா.பழனிசெல்வம்(27), மு.சேர்ம ராஜ்(24), ச.முரளிகிருஷ்ணன்(23), சு.முத்து குமார்(24), சோ.முத்துமாரீஸ்வரன்(27), ரா.கொம்பையாபாண்டியன்(27) ஆகியோர், அந்த செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, கோவில்பட்டி வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. செல்பேசி கோபுரம் அமைப்பதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கை மீது 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x