Published : 08 Nov 2014 09:20 AM
Last Updated : 08 Nov 2014 09:20 AM

ரயில்வே தேர்வுகளில் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவில்லை: ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா விளக்கம்

ரயில்வே தேர்வில் தமிழக மாண வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.

அரக்கோணம் அடுத்த மேல்பாக் கத்தில் தனியார் நிறுவனம் சார்பில், தானியங்கி இயந்திரங்கள் மூலம் கார்களை பிரத்யேக சரக்கு ரயிலில் ஏற்றி இறக்கும் ரயில் சேவையை, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சதானந்த கவுடா கூறும்போது, ‘‘தொழிற்சாலைகளில் தயாரிக் கப்பட்ட கார்களை இரண்டு அடுக்குகள் கொண்ட சரக்கு ரயில் பெட்டிகளில் எடுத்துச் செல்லும் தானியங்கி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறுகிய கால நேரத்தில் மாசு இல்லாத பயணத்தில், அதிகப் படியான கார்களை பாதுகாப்புடன் கொண்டு செல்ல முடியும்.

சென்னைக்கு அருகில் உள்ள ஃபோர்டு, நிஸான், ஹூண் டாய் நிறுவனங்களில் இருந்து கார்களை நாட்டின் பிற பகுதிக ளுக்குச் சுலபமாக அனுப்ப முடியும். ரயில்வேயின் மொத்த வருவாயில் 60 சதவீதம் சரக்குகள் கையாள்வதில் கிடைக்கிறது. வரும் 2019-ம் ஆண்டுக்குள் சரக்கு கையாளும் திறனை இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ரயில்வே தேர்வில் தமிழக மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. ரயில்வே தேர்வுகள் மாநில மொழி யில், மாநிலத்துக்குள் நடத்தப் படுகிறது. ரயில்வே பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்’’ என்றார்.

அமைச்சரிடம் கோரிக்கை

அரக்கோணம் ரயில் நிலையத் துக்கு நேற்று வந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா விடம் ரயில் பயணிகள் சங்கத் தினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘‘அரக் கோணம் ரயில் நிலையத்தில் நூற் றுக்கணக்கான ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. ரயில் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க அரக்கோணத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க வேண்டும்.

அரக்கோணம்- திருவள்ளூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அரக்கோணம் பகுதியில் ஐஎன்எஸ் ராஜாளி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, முன்னணி தொழிற்சாலைகள், அரக்கோணம் அருகில் உள்ள திருத்தணி, காஞ்சிபுரம், சோளிங்கர் போன்ற ஊர்களில் முக்கிய கோயில்கள் உள்ளன. எனவே, அரக்கோணத்தில் மங்களூர், தாதர், திருவனந்தபுரம், கோர்பா, இந்தூர், பாட்னா, ஷாலிமார், திப்ருகர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திருத்தணி- சென்னை கடற்கரை, ஆவடி- திருத்தணி, சென்னை- திருப்பதி மின்சார ரயில், சென்னை- பெங்களூரு, சென்னை-அகமதாபாத், சென்னை- மும்பை லோகமான்ய திலக் ரயில்களை இயக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் வசதிக் காக சாய்வு நடைபாதை அமைக்க வேண்டும். ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளம் அருகே கைனூரில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும்’’ என தெரி வித்துள்ளனர்..

அரக்கோணம் மேல்பாக்கத்தில் கார்களை ஏற்றிச் செல்லும் பிரத்யேக சரக்கு ரயில் சேவையை சதானந்த கவுடா, கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x