Last Updated : 01 Aug, 2016 12:14 PM

 

Published : 01 Aug 2016 12:14 PM
Last Updated : 01 Aug 2016 12:14 PM

கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: மூன்று மாதத்தில் 43 பேரின் உயிரை காப்பாற்றிய புதுச்சேரி இளைஞர்

இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என உறுதியாக நம்பியவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அவரது ஒவ்வொரு கருத்துகளும் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் இன்று கலாம் காட்டிய வழியில் வீறுநடை போடும் இந்திய தூண்கள் ஏராளம். இதில் புதுச்சேரி ராமநாதபுரத்தை சேர்ந்த மணிகண்டனும் அடங்குவார்.

சட்டை பாக்கெட்டில் கலாம் படம், மொபைல் ரிங்டோனிலும் கலாமின் பெயர், மனதில் கலாமின் கொள்கைகள் என அவர் காட்டிய வழியில் வலம் வருகிறார் மணிகண்டன். இவரது சொந்த ஊர் புதுச்சேரி பத்துக்கண்ணு அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம். கடந்த 6 மாதமாக கலாம் அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இதில் 50 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர் தனது சொந்த செலவில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி கலாம் அறக்கட்டளை என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்றி வருகிறார். விபத்து, பிரசவம் என எதுவாக இருந்தாலும் தகவல் வந்த அடுத்த கனமே ஆம்புலன்சை அனுப்பி உதவி செய்கிறார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக, பகல் நேரங்களில் மணிகண்டனின் தந்தை நடராஜனும், இரவு நேரங்களில் ரூ.5 ஆயிரம் மாத ஊதியத்துக்கு ஒரு நபரும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆம்புலன்ஸ் சேவைக்காக மாதந்தோறும் ரூ.22 ஆயிரம் வரை தனது சொந்த பணத்தில் செலவிடுகிறார். ஓட்டுநர் இல்லாத அவசர நேரங்களில் மணிகண்டனே வாகனத்தை இயக்கி மக்களின் உயிரை காப்பாற்றுகிறார். மேலும் அறக்கட்டளை சார்பில் பிரபாகர், ஸ்ருதி என்ற 2 மாணவர்களை பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்கவும் உதவி செய்து வருகிறார்.

இதுகுறித்து மணிகண்டன் ‘தி இந்துவிடம்’ கூறியதாவது: இளைஞர்களின் கதாநாயகன் அப்துல் கலாம் தான். அவரது கருத்துகள் ஒவ்வொன்றும் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தின. இதனால் மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அந்த நேரத்தில் தான் ஒரு விபரீத சம்பவம் நடந்தது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பத்துக்கண்ணு வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. அதை சுற்றிலும் மக்கள் கூட்டம். நானும் சென்று விபத்தை பார்த்தேன். அந்த விபத்தில் சிக்கி உயிருக்காக போராடிக் கொண்டிருந்தது என் உடன்பிறந்த சகோதரன். விபத்து நிகழ்ந்து பல மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. உடனே சகோதரனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தேன். காலதாமதம் ஆனதால் சிகிச்சை பலனின்றி சகோதரன் எங்களை விட்டு பிரிய நேர்ந்தது. இந்த சம்பவம் இன்னும் என் கண்களை விட்டு மறையவில்லை.

பத்துக்கண்ணு சந்திப்பு பல ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. பல இடங்களில் வளைவான சாலைகள் என்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழும். ஆனால் தொடர்பு கொள்ளும் வகையில் அருகிலேயே ஆம்புலன்ஸ் சேவை கிடையாது. ஒருவேளை ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்றால், அது நகர பகுதியில் இருந்துதான் வர வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவேதான் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி மக்களுக்கு இலவசமாக இயக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி, கடந்த 30.4.2016 ஆண்டு ரூ.3.85 லட்சம் செலவில் புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். கடந்த 3 மாதத்தில் விபத்தில் சிக்கிய 43 பேரை மீட்டு மருத்துவமனையில் காலத்தோடு சேர்த்திருக்கிறோம்.

அதேபோல் பிரசவத்துக்கு செல்லும் பெண்களுக்காகவும் ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகிறேன். சமீபத்தில் கூட ஆம்புலன்ஸிலேயே ஒரு குழந்தை பிறந்தது. தற்போது பத்துக்கண்ணு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்து நிகழ்ந்து ஆம்புலன்ஸ் சேவைக்காக ஜிப்மர் மற்றும் 108-ஐ தொடர்பு கொண்டால் அவர்கள் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுக்கின்றனர். அந்த அளவிற்கு மக்களுக்கு துரித சேவை செய்கிறோம். இது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்.

மேலும் பல மருத்துவமனைகளில் இலவச அமரர் ஊர்தி வசதி இல்லை. இதனால் ஏழை மக்கள் அதிக பணம் கொடுத்து இறந்தவர்களின் உடலை கொண்டுவர வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, ஏழை மக்களுக்காக அமரர் ஊர்தி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். கழிவறை, நிழற்குடை என பலவற்றை செய்யவும் திட்டமிட்டுள்ளேன்’’ என்கிறார் உறுதியாக.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x